தமிழ் அவைக்காற்று கழகத்தின் 40 ஆவது ஆண்டு தமிழ் நாடக விழா   

அடுத்த வாரம், செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி, லண்டன் வாடேரஸ்மீட் என்ற பெரும் அரங்கில்(WATERSMEET THEATRE, HIGH ST ,RICKMANSWORTH , WD3 1EH)  மாலை 6மணிக்கு  க பாலேந்திரா தலைமையில் இயங்கும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.கடந்த 15வருடங்களாக லண்டனில் முதலாவது தமிழ் நாடகப் பள்ளியை நிறுவி வாராந்தம் நாடக வகுப்புகளை தொடர்ந்து செய்து வருகிறது .பயிற்சியாளர்களாக பாலேந்திராவும் ஆனந்தராணியும்செயல்படுகின்றனர்.இந்த நாடகப் பள்ளியின் 15ஆவது ஆண்டு நிறைவும் அதே தினம் கொண்டாடப் படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி அன்றைய விழாவில்”அமைதி பூங்கா “,   ” அது” ,”கண்ணாடி வார்ப்புக்கள்”,  நீண்டஒரு பயணத்தில் ” ஆகிய  நான்கு நாடக நிகழ்வுகள் மேடையை அலங்கரிக்க உள்ளன.  .

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் 40 வது ஆண்டு நிறைவு விழாவில் இவர்களது லண்டன் நாடகப் பள்ளி சிறுவர்களை( 6- 14 வயது ) வைத்து ஈழத்து அரங்காவியலாளர் ஜோன்சன் ராஜ்குமார் எழுதிய “அமைதி பூங்கா “நாடகம் முதல் முறையாக லண்டனில் மேடையேறுகிறது.”சின்ன சின்ன பிள்ளைகள் சிரிக்கும் சின்ன முல்லைகள் நல்லதொரு கதையினை சொல்லவந்தோம் பாருங்கள் ” என்ற பாடலுடன் ஆரம்பமாகும் இந்த நாடகம் சிறுவர்களையும் பெரியவர்களையும் கவரக் கூடியது. , லண்டன் இளையோர் தாமாகவே தமிழில் எழுதி நடிக்கும் ” அது” என்ற நாடகம் முதல் முறையாக மேடையேறுகிறது.தமிழ் மொழியின் அது என்ற வார்த்தையின் பிரயோகம் சில சந்தர்ப்பங்களில் எப்படி அபத்தமாக கையாளப் படுகிறது என்பதனை காட்டும் நகைச்சவையுடன் கூடிய இந்தப் பிரதியை லண்டன் இளையவர்கள் ஆக்கியிருக்கிறார்கள். லண்டனில் பிறந்து வளரும் இளையவர்கள்,சநதோஷ , சிந்து, மானசி ஆகியோர் எழுதிய இந்த நாடகத்தை மானசி பாலேந்திரா நெறிப்படுத்துகிறார்.

இவர்கள் லண்டனில் 6 வயதில் இருந்து கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பாலேந்திராவின் நாடகங்களில் நடித்து பயிற்றப் படடவர்கள். , லண்டன் இளையோரை இணைத்து “கண்ணாடி வார்ப்புக்கள்” நாடகம் புதிய தயாரிப்பாக இந்த விழாவில் மேடையேறுவது சிறப்பு அம்சமாகும்.

காத்திரமான புகழ்பெற்ற நாடகத்தை தமிழ் இரண்டாம் மொழி கூட அல்லாத இளையவர்கள் நடிப்பது ஒரு பெரிய சவால்.பாத்திர இயல்புகளை சரியாக உணர்ந்து, உணர்வுசூழலை வெளிப்படுத்தி நடிக்க வேண்டும்.முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் ஜேனுசன் 19 வயது இளைஞர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நாடகங்களுடன், பாலேந்திரா நெறிப்படுத்திய முக்கியமான 18 நாடகங்களை இணைத்து – பங்கு பற்றியநடிகர்கள் அனைவரும் மேடையில் தோன்றி ” நீண்டஒரு பயணத்தில் ” என்ற .நாடக நிகழ்வினை வழங்க இருக்கிறார்கள்..இவர்களது பெரும்பான்மையான நாடகங்களில் சமூகத்தில் காணும் ஒடுக்கப்படடவர்களுக்கெதிரான பலவிதமான வன்முறைகளும் அதனால்பாதிப்படையும் சமூக, தனிமனித அவலங்களும் பேசுபொருளாக இருந்து வருகிறது.

“சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றான் மகாகவி பாரதி. இப்பொழுது, நாடகத்தமிழ் நானிலம் முழுவதும் ஒலிப்பதற்குக் காரணமாக இருப்பவர்கள், லண்டன் அவைக்காற்று கலைக் கழகக் குழுவினர். அவர்கள் லண்டனில் தமது 40 வது ஆண்டு விழாவைச் சிறப்பாக க் கொண்டாட இருக்கின்றனர். இந்த நாடகக் குழுவினருக்கு ஆணிவேராக இருக்கும் ஆனந்தராணி-பாலேந்திரா தம்பதியருக்கும், நாடகக் குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள்.

நான் அக்குழுவினருடன் சுவிட்ஸர்லாந்துக்குச் சென்றபோது, இவர்கள் மேடையேற்றிய நாடகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு என்னைப் பிரமிக்க வைத்தது. அரசியல், சமூகப் பிரச்னைகளை வெறும்கோஷங்களாகாமல், அழகியல் உணர்வுடன் இவர்கள் அணுகும் முறை பாராட்டத்தக்கது.

‘Catch them young’ என்பதற்கேற்ப கடந்த சில ஆண்டுகளாகச் சிறார் நாடகப் பட்டறைகள் நடத்தி அவர்களுக்குப் பயிற்சி அளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. தமிழ் நாட்டில் இத்தகையப் பயிற்சிக் கூடங்கள் இல்லவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்”.

-இது தமிழகத்து நாடக ஆளுமை பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் கூற்று.

1978 இல் பாலேந்திரா நெறிப்படுத்திய “கண்ணாடி வார்ப்புக்கள்” நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த அமைப்பு இலங்கையில் தொடங்கப் பட்டது.1978 இல் இருந்து 1982 வரை இலங்கையிலும். கடந்த 36 வருடங்களாக லண்டனிலும் புலம் பெயர் நாடுகளிலும் தொடர்ந்த நாடக செயற்பாடுகளை இடைவிடாமல் செய்து வருகிறது .தாயகத்தில் 4 வருடங்களில் கணிசமான பங்களிப்பை தமிழ் நவீன நாடக உலகுக்கு , காத்திரமான நாடகங்களின் தொடர்ந்த மேடையேற்றங்கள் மூலம் செய்திருக்கிறது அவைக்காற்றுக் கழகத்தின் சிறந்த படைப்பபுக்கள் நூற்றுக்கணக்கான மேடையேற்றங்களைக் கண்டிருக்கின்றன. லண்டன் மாநகரத்தோடு மட்டும் நின்றுவிடாமல் ஏனைய நாடுகளுக்கும் சென்று, நாடக ரசிகர்களின் தாகத்தை தீர்ப்பது மட்டுமில்லாமல், படைப்பாளிகளின் ஆர்வத்தைத் தூண்டி வருவது பாராட்டுதற்குரியதாகும்.

அன்றிலிருந்து இன்று வரை பங்கு பற்றுபவர்கள் அனைவரும் தன்னார்வ தொண்டர்களே.எந்த பெரிய அமைப்புகளின் நிதி பெறாமல் சமரசம் ஏதுமில்லாமல் தமிழ் மக்களின் ஆதரவில் கடினமான விடாமுயற்சியுடன் நாடக இயக்கத்தை தொடர்கிறது.

கடந்து 28 வருடங்களாக லண்டனில் பிறந்து வளரும் தமிழ் சிறுவர்களைக் கொண்டு தமிழில் நாடகங்களை செய்து மேடையேற்றி வருகிறது .சென்ற வருடம்

6 வயதில் இவர்களோடு இணைந்த சிறுவர் சிலர் இளையவர்களாக திருமணமான பின்னரும் தொடர்ந்து இவர்களுடன் பயணிக்கிறார்கள்.கண்ணாடி வார்ப்புகள் நாடகத்தில் மகளாக நடிக்கும் சரிதா அண்ணாதுரை நாடக இயக்கத்தில் சிறுமியாக இணைந்தவர்    தனது  பிள்ளைகளையும்   நாடக வகுப்புகளில் இணைத்து அவர்களும் புதிய சிறுவர் நாடகங்களில் பங்கு பற்றுவது இவர்களின் தொடர்ந்த வளர்ச்சிக்கு அறிகுறி.

தமிழர் வாழும் பல நாடுகளிலும் நாடக விழாக்களை நடத்தியதோடு, லண்டனில் கடந்த 27 வருடங்களாக தொடர்ந்து இடைவிடாமல் வருடாந்த நாடக விழாக்களை செய்து வரும் இவர்களது பணி போற்றத்தகுந்தது.இந்த நாடக விழா புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வரலாறில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என நம்பலாம்.

கண்ணாடி வார்ப்புகள் நாடகத்தின் புதிய தயாரிப்பு பற்றி நாடக நெறியாளர் பாலேந்திரா கூறுவது:

“எனக்கு மிகவும் பிடித்த நாடகமான ‘கண்ணாடி வார்ப்புகள்’ புதிய தயாரிப்பாக மேடையேறுகிறது. இதுவரை 70 நாடகங்களை நான் நெறிப்படுத்தியிருந்தாலும் இந்த நாடகம் எனக்கு மிகவும் நெருக்கமான நாடகமாக நான் உணர்கிறேன். இன்று இந்த நாடகத்தில் புலம் பெயர் நாட்டில் பிறந்து வளரும் இளையவர்கள் மூவர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்கள் சிறுவர்களாக எமது நாடகப் பயணத்தில் இணைந்தவர்கள். இவர்களுக்கு இந்த நாடகம் ஒரு பெரிய சவால். பாத்திர இயல்புகளை உணர்ந்து தமிழில் பேசி நடிப்பது மிகக்கடினமானது. மிகுந்த உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் இவர்கள் இன்று மேடையேறுகிறார்கள்.

முதல் மேடையேற்றத்தில் பாலேந்திரா, நிர்மலா, ஆனந்தராணி, ஜெரால்ட் ஆகியோர் நடித்தனர். கொழும்பிலும் மற்றும் பல இடங்களிலும் 13 தடவைகள் இந்த நாடகத்தை மேடையேற்றினோம். இந்த நாடகம் இலங்கை தொலைக்காட்சியான ரூபவாஹினி ஆரம்பமாகிய போது முதல் நாடகமாக அங்கு பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பாகியது. இலங்கை வானொலியிலும் பல தடவைகள் ஒலிபரப்பப்பட்டது.

‘கண்ணாடி வார்ப்புகள்’ கலாச்சார இடைவெளிகளைக் கடந்து இன்றும் பல்வேறு நாடுகளிலும், மேடைகளிலும், திரையிலும் நிலைத்து நிற்கும் உன்னத கலை வார்ப்பு. இந்த நாடகத்தில் நான்கு பாத்திரங்கள் மட்டும்தான். அவர்களிடையே முரண்பாடு வெடிக்கிறது. அவர்கள் சூழ்நிலையின் கைதிகள். கணவனால் கை விடப்பட்டு இந்த அவசர உலகில் தான் நேசிக்கும் பிள்ளைகளை ஆளாக்கக் க~;டப்படும் தாய். எழுத்தாளனாக இருந்தும் சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தினால் சப்பாத்துக் கம்பனியில், தான் விரும்பாத தொழிலை, குடும்பத்திற்காக செய்யும்மகன். தாழ்வுச் சிக்கலில் உழலும் மகள். இப்படியான குடும்பங்களை எந்த சமுதாயத்திலும் பார்க்க முடியும். உலகப் பொதுமையான இந்தக் கரு அழகான மென்மையான நாடகமாக மிளிர்ந்துள்ளது. தனது சொந்த நிராசைகளை, மிக அற்புதமாக நாடகமாக்கியுள்ளார் அமெரிக்க நாடகாசிரியர் ரென்னஸி வில்லியம்ஸ். 1940களில் எழுதிய இந்த நாடகம் இன்றும் பல மேடைகளிலும் புத்தாக்கம் பெற்று மேடையேற்றப்படுகின்றது. பல நாடுகளிலும் வெற்றி பெற்ற இந்த நாடகம் அமெரிக்காவின் மிகச் சிறந்த நாடகமாக தற்போது புகழப்படுகின்றது ‘இளையவர்களே எமது எதிர்காலம்’ என்ற எமது வாசகத்திற்கிணங்க இளையவர்கள் பங்கேற்கும் இந்த நாடகம் நாடக ரசிகர்களுக்கு நல்ல அரங்க அனுபவமாக உங்கள் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்”

நிகழ்ச்சி பற்றிய மேலதிக விபரங்களை 0208 4222859 தொலை பேசியில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *